தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக தலைமையிலான கூட்டணியில் தொகுதிகளைப் பங்கீடு செய்வது தொடர்பாகப் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. வரவிருக்கும் தேர்தலில் தங்களுக்கு 36 தொகுதிகள் ஒதுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை காங்கிரஸ் கட்சி முன்வைத்துள்ளதாகத் தெரிகிறது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் 25 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ், இம்முறை கூடுதல் இடங்களைக் கோரி அழுத்தம் கொடுத்து வருகிறது. இதுமட்டுமின்றி, தமிழக ஆட்சியில் தங்களுக்குப் பங்கு வழங்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டிலும் காங்கிரஸ் இருப்பதாகத் தகவல்கள் கசிகின்றன.
கடந்த முறையை விடக் கூடுதல் பலத்துடன் களம் இறங்க காங்கிரஸ் மேலிடம் விரும்புவதே இதற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது. தற்போது 36 இடங்கள் என்ற புதிய இலக்கைக் காங்கிரஸ் நிர்ணயித்துள்ளது திமுக வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. கூட்டணி பேச்சுவார்த்தைகள் தொடங்கும் முன்பே இத்தகைய தகவல்கள் வெளியாவது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தொகுதிப் பங்கீடு தொடர்பாக இரு தரப்பிலும் அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தைகள் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆட்சியில் பங்கு மற்றும் கூடுதல் இடங்கள் என்ற காங்கிரஸின் பிடிவாதத்தால் கூட்டணியில் இழுபறி நிலவுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனால் தேர்தல் கூட்டணி சமன்பாடுகளில் மாற்றங்கள் ஏற்படுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்…
