மனிதர்களின் பாவங்களை நீக்கி மனத்தூய்மை தரும் மகத்தான வழிகளில் ஒன்றாகப் புண்ணிய தீர்த்த நீராடல் போற்றப்படுகிறது. சீர்காழி பிரம்ம தீர்த்தத்தில் நீராடினால் சகல பாவங்களும் நீங்கி மனம் தூய்மையடையும் என்றும், திருக்கழுக்குன்றம் சங்கு தீர்த்தத்தில் நீராடுவது மகத்துவமானது என்றும் ஆன்மீக நூல்கள் கூறுகின்றன. செஞ்சேரி ஞான தீர்த்தம் துன்பங்களை நீக்கி அமைதியைத் தரும் அதேவேளையில், திருச்செந்தூர் நாழிக்கிணறு தீர்த்தம் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வல்லமை கொண்டது. காஞ்சிபுரம் சர்வ தீர்த்தத்தில் தர்ப்பணம் செய்வது முக்தியை அளிக்கும் எனவும்,
பாபநாசம் கல்யாண தீர்த்தம் அகத்திய முனிவருக்கு இறைவன் திருமணக் கோலம் காட்டிய தலம் எனவும் நம்பப்படுகிறது. மதுரை பொற்றாமரைக் குளத்தின் புனித நீரைத் தெளித்துக் கொள்வது புண்ணியம் தரும். விரிஞ்சிபுரம் சிம்மக்குள தீர்த்தத்தில் கார்த்திகை ஞாயிறன்று நீராடினால் குழந்தை பாக்கியம் கிட்டும் என்பது பெண்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.
மருதமலையின் மூன்று தீர்த்தங்கள் மருத்துவ குணம் வாய்ந்தவை; ராமேஸ்வரம் மற்றும் கும்பகோணம் மகாமக குளத்தில் நீராடுவது பிறவிப் பாவங்களை நீக்கும். இத்தகைய தீர்த்தங்களின் சிறப்புகளை அறிந்து நீராடினால் வாழ்வில் நன்மைகள் பெருகும்…
