தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடிப்பதாகக் கூறி இலங்கை கடற்படையினர் அடிக்கடி கைது நடவடிக்கைகளில் ஈடுபடுவது தொடர்கதையாகி வருகிறது. அந்த வகையில், இன்று நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை சுற்றி வளைத்துள்ளது. இதில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த 7 மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு, இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களைக் கைது செய்ததோடு மட்டுமல்லாமல், அவர்கள் பயன்படுத்திய 2 நாட்டுப் படகுகளையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட மீனவர்கள் மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை இலங்கைக்குக் கொண்டு சென்று விசாரணை நடத்தி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தங்கள் வாழ்வாதாரத்திற்காகக் கடலுக்குச் செல்லும் மீனவர்கள் இதுபோன்று சிறைபிடிக்கப்படுவது, மீனவர் குடும்பங்கள் மற்றும் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தொடர் கைது நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து, கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மீனவர்களின் கோரிக்கையாக உள்ளது.

