தைப்பூசம் என்றாலே நம் நினைவுக்கு வருவது முருகப்பெருமான் அன்னை பார்வதியிடம் வேல் வாங்கிய நிகழ்வுதான். ஆனால், இந்த நாள் முருகனுக்கு மட்டுமல்லாது சிவன், சக்தி மற்றும் குரு வழிபாட்டிற்கும் மிகவும் உகந்த நாளாகும். இந்தியா மட்டுமின்றி மலேசியா, சிங்கப்பூர், இலங்கை போன்ற நாடுகளிலும் கோலாகலமாகக் கொண்டாடப்படும் இத்திருநாளில் பல அறியாத ஆன்மீகச் சிறப்புகள் அடங்கியுள்ளன.பழனியில் ஆண்டிக்கோலத்தில் நிற்கும் முருகனுக்கு, அன்னை பராசக்தி தனது முழு சக்தியையும் திரட்டி ‘ஞானவேல்’ வழங்கியது இந்தத் தைப்பூசத் திருநாளில்தான்.
அதேபோல, வள்ளலார் ராமலிங்க அடிகளார் வடலூரில் ஏழு திரைகளை விலக்கி ஜோதி தரிசனம் காட்டியதும், முக்தி அடைந்ததும் இதே நன்னாளில்தான். இன்றும் வடலூரில் லட்சக்கணக்கான பக்தர்கள் ஜோதி தரிசனத்தைக் காணக் கூடுகின்றனர்.ஆன்மீக வரலாற்றில், திருஞானசம்பந்தர் மயிலாப்பூரில் பூம்பாவையை அஸ்தி கலசத்திலிருந்து உயிர்ப்பித்த அதிசயம், சிதம்பரத்தில் பதஞ்சலி முனிவருக்காக நடராஜர் ஆனந்தத் தாண்டவம் ஆடியது,
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் தன் தங்கை சமயபுரம் மாரியம்மனுக்குச் சீர் வரிசை அளிப்பது எனப் பல்வேறு புராண நிகழ்வுகள் அரங்கேறியது தைப்பூசத்தன்றுதான். உலகம் தோன்றியபோது நீர் மற்றும் ஜீவராசிகள் உருவான தினமாகவும் இது போற்றப்படுகிறது. இத்தகைய சிறப்புமிக்க நாளில் விரதமிருந்து வழிபட்டால் அனைத்து தெய்வங்களின் அருளையும் ஒருசேரப் பெறலாம்…
