நாக்பூரில் நடைபெற்ற இந்தியா – நியூசிலாந்து இடையிலான முதல் டி20 போட்டியில், இந்திய இளம் வீரர் அபிஷேக் சர்மா சிக்ஸர் மழை பொழிந்து புதிய சாதனைகளைப் படைத்துள்ளார். டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்த நியூசிலாந்து அணியின் முடிவை, தனது மிரட்டலான பேட்டிங் மூலம் தவிடுபொடியாக்கிய அபிஷேக், முதல் பந்திலேயே சிக்ஸர் விளாசி இன்னிங்ஸைத் தொடங்கினார். மைதானம் முழுவதும் பவுண்டரிகளும் சிக்ஸர்களுமாகப் பறக்கவிட்டு, 8 இமாலய சிக்ஸர்களுடன் 84 ரன்களைக் குவித்து ஆட்டமிழந்தார்.
இப்போட்டியில் அவர் தனது குருவான யுவராஜ் சிங்கின் சாதனையை முறியடித்தது முக்கிய நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது. முன்னதாக 73 சிக்ஸர்களுடன் இருந்த அவர், நேற்றைய ஆட்டத்தில் யுவராஜின் 74 சிக்ஸர்கள் சாதனையைத் தாண்டி, இந்தியாவுக்காக அதிக சிக்ஸர் அடித்தவர்கள் பட்டியலில் 6-வது இடத்தைப் பிடித்துள்ளார். ஹர்திக் பாண்டியா (106), கே.எல். ராகுல் (99) ஆகியோர் அவருக்கு முன்னிலை வகிக்கின்றனர்.
மேலும், டி20 போட்டிகளில் அதிவேகமாக 5,000 ரன்களைக் கடந்த 3-வது இந்திய வீரர் என்ற பெருமையையும் அபிஷேக் பெற்றார். இதன் மூலம் 165 இன்னிங்ஸ்களில் இச்சாதனையை நிகழ்த்திய விராட் கோலியை அவர் பின்னுக்குத் தள்ளியுள்ளார். ரோஹித் சர்மா (205 சிக்ஸர்கள்), சூர்யகுமார் யாதவ் (156), விராட் கோலி (124) ஆகியோர் அதிக சிக்ஸர் அடித்தவர்கள் பட்டியலில் முதல் மூன்று இடங்களில் தொடர்ந்து நீடிக்கின்றனர்…
