நடிகர் சிவகார்த்திகேயன் விளம்பர வெளிச்சம் இல்லாமல் செய்து வரும் உதவிகள் குறித்து இயக்குனர் இரா.சரவணன் மனம் திறந்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், எம்.டெக் படிக்கும் மாணவி ஒருவரின் தந்தை கடன் தொல்லையால் உயிரிழந்த நிலையில், அவருக்குக் கட்டணம் செலுத்த சிவகார்த்திகேயனிடம் உதவி கோரியதாகத் தெரிவித்தார்.
தனது ‘பராசக்தி’ படம் வெளியாகும் பரபரப்பான சூழலிலும், ஒரே ஒரு குறுஞ்செய்தியைப் பார்த்தவுடன் அந்த மாணவிக்கு உதவினார் சிவகார்த்திகேயன். அத்துடன், “சின்ன உதவிதான், நான் செய்ததாகச் சொல்லாதீர்கள் அண்ணே,” என்று அடக்கமாகக் கேட்டுக்கொண்டார்.
இதேபோல், குடிசை வீட்டில் வசித்த சகானா என்ற மாணவி நீட் தேர்வு எழுத உதவி செய்து, அவரை இன்று மருத்துவம் படிக்க வைத்துள்ளார். மேலும், மற்றொரு மாணவனின் முழு படிப்புச் செலவையும் அவரே ஏற்று நடத்தி வருகிறார். “இதுதான் சிவாவின் இன்னொரு முகம்” என இயக்குனர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்…
