முருகப்பெருமானுக்கு உகந்த நாளான தைப்பூசத் திருவிழா, வரும் பிப்ரவரி 1-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட உள்ளது. அன்னை பராசக்தியிடம் முருகன் ஞானவேல் பெற்ற இந்த நாளில் விரதமிருந்தால் கடன் தொல்லை, நோய் மற்றும் திருமணத் தடைகள் நீங்கும் என்பது ஐதீகம்.விரதம் இருப்பவர்கள் அதிகாலை பிரம்ம முகூர்த்தமான காலை 04.30 மணி முதல் 06.30 மணிக்குள் வழிபாட்டைத் தொடங்குவது மிகச் சிறப்பு.
அல்லது காலை 8.00 – 09.30 மணிக்குள் வழிபடலாம். வீட்டில் முருகனின் படத்திற்கு முன் 6 விளக்குகளை ஏற்றி, வேல் இருந்தால் அதற்குப் பால் அபிஷேகம் செய்து, தினை மாவு மற்றும் பழங்களை நைவேத்தியமாகப் படைக்க வேண்டும்.பகல் வேளையில் பால் குடம் எடுத்துச் சென்று கோவிலில் அபிஷேகம் செய்வது கூடுதல் பலன் தரும்.
நாள் முழுவதும் உணவைத் தவிர்த்தோ அல்லது பால், பழங்களை மட்டும் உட்கொண்டோ விரதம் இருக்கலாம். மாலை 6 மணிக்கு மேல் முருகனைத் தரிசித்து விரதத்தை நிறைவு செய்வதன் மூலம் நினைத்த காரியம் கைகூடும் என ஆன்மீகப் பெரியோர்கள் தெரிவித்துள்ளனர்…
