ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் கடந்த 200 ஆண்டுகளில் இல்லாத அளவிற்குப் பதிவான கடும் பனிப்பொழிவால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது. இடைவிடாது பெய்து வரும் பனிப்புயலால் நகரின் முக்கிய சாலைகள், விமான நிலையங்கள் மற்றும் பொதுப் போக்குவரத்துச் சேவைகள் ஸ்தம்பித்துள்ளன.
ரஷ்யாவில் குளிர்காலம் எப்போதுமே கடுமையாக இருக்கும் என்றாலும், இந்த ஆண்டு பெய்துள்ள பனிப்பொழிவு வரலாற்றுச் சாதனையை முறியடித்துள்ளது. வானிலை ஆய்வு மையத் தகவலின்படி,
ஒரே நாளில் பதிவான பனிப்பொழிவு அளவானது, வழக்கமாக ஒரு மாதத்தில் பெய்யக்கூடிய அளவில் மூன்றில் ஒரு பங்காகும். பல இடங்களில் பனிக்குவியல்கள் 60 சென்டிமீட்டருக்கும் மேல் உயர்ந்து காணப்படுகின்றன.
ஸ்தம்பித்த போக்குவரத்து: மாஸ்கோ வீதிகள் முழுவதும் பனிப்போர்வையால் மூடப்பட்டுள்ளதால், வாகனப் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. சாலைகளில் நிறுத்தப்பட்டிருந்த கார்கள் பனிக்குவியலுக்குள் புதையுண்டுள்ளன.
பனியை அகற்றும் பணியில் சுமார் 1 லட்சத்திற்கும் அதிகமான துப்புரவுப் பணியாளர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான கனரக இயந்திரங்கள் இரவு பகலாக ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இருப்பினும், தொடர்ந்து பெய்யும்
பனியால் சாலைகளைச் சீரமைப்பது பெரும் சவாலாக மாறியுள்ளது. விமானங்கள் ரத்து: கடுமையான பனிமூட்டம் மற்றும் மோசமான வானிலை காரணமாக மாஸ்கோ விமான நிலையங்களில் நூற்றுக்கணக்கான விமானங்கள்
தாமதமாகியுள்ளன, பல சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் பயணிகள் விமான நிலையங்களிலேயே காத்திருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. மக்கள் அவதி: “என் வாழ்நாளில் இப்படி ஒரு பனிப்பொழிவை நான் கண்டதே இல்லை,”
என உள்ளூர்வாசி ஒருவர் தெரிவித்தார். கடுமையான குளிர் மற்றும் பனிச் சரிவு காரணமாக மக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என நகர நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. கல்வி நிறுவனங்கள் மற்றும்
சில அலுவலகங்களுக்கு விடுமுறை அளிப்பது குறித்துப் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. அடுத்த சில நாட்களுக்குக் குளிர் இன்னும் அதிகரிக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன…

