பஞ்சபூதத் தலங்களில் அக்னித் தலமாகப் போற்றப்படும் திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயில் உருவான புராணக் கதைகள் வியக்கத்தக்கவை. சிவனை மட்டுமே வணங்கிய பிருங்கி முனிவருக்கு, சக்தியும் சிவமும் ஒன்று என்பதை உணர்த்தவே சிவபெருமான் அர்த்தநாரீஸ்வரர் உருவம் எடுத்தார். அன்னை பராசக்தி இத்தலத்தில் தவம் புரிந்து, சிவபெருமானின் இடது பாகத்தில் அமர்ந்து அர்த்தநாரீஸ்வரராகக் காட்சி தந்த நிகழ்வு ஒரு சிவராத்திரி நாளில் அரங்கேறியது. இதுவே சிவராத்திரி விழா உருவாகக் காரணமாக அமைந்தது. மற்றொரு வரலாறாக, பிரம்மாவுக்கும் விஷ்ணுவுக்கும் தங்களில் யார் பெரியவர் என்ற போட்டி எழுந்தபோது, சிவன் பெரும் ஜோதிப் பிழம்பாக நின்றார்.
அந்த ஜோதியே இத்தலத்தில் மலையாக நிலைபெற்றுள்ளது.சிவனின் அடியைக் காண விஷ்ணு வராக அவதாரம் எடுத்துப் பூமிக்குள் சென்றார்; முடியைக் காணப் பிரம்மா அன்னப் பறவையாக மேலே பறந்தார். அடியைக் காண முடியாத விஷ்ணு உண்மையை ஒப்புக்கொண்டார், ஆனால் பிரம்மா தாழம்பூவைப் பொய் சாட்சி சொல்ல வைத்துத் தான் முடியைக் கண்டதாகக் கூறினார்.
இதனால் கோபமடைந்த சிவன், பிரம்மாவுக்குப் பூமியில் தனியாகக் கோயில் இல்லை எனவும், பொய் சொன்ன தாழம்பூவைத் தனக்குச் சாற்றக்கூடாது எனவும் சாபமிட்டார். விஷ்ணுவின் நேர்மைக்கு மெச்சி அவருக்குச் சமமான பூஜைகள் கிடைக்க வரம் அளித்தார். இன்றும் சிவத்தலங்களில் தாழம்பூ பயன்படுத்தப்படாததற்கு இந்த வரலாற்றுச் சம்பவமே அடிப்படையாக உள்ளது…
