பிஎம் கிசான் திட்டத்தின் 22-வது தவணை நிதி வழங்கப்பட உள்ள நிலையில், விவசாயிகளுக்கு மத்திய அரசு புதிய நிபந்தனையை விதித்துள்ளது. தமிழ்நாடு, ஆந்திரா உட்பட 14 மாநிலங்களில் புதிதாக இத்திட்டத்தில் இணைய விரும்பும் விவசாயிகளுக்கு ‘விவசாயி ஐடி’ (Farmer ID) கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த அடையாள அட்டை இல்லாமல் சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் இனி நிராகரிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை இம்மாநிலங்களில் சுமார் 7.67 கோடி விவசாயி ஐடிக்கள் வழங்கப்பட்டுள்ளதாக அரசுத் தரவுகள் கூறுகின்றன. இந்த ஐடி என்பது ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட ஒரு தனித்துவமான டிஜிட்டல் அடையாளமாகும். இதில் விவசாயியின் பெயர், நில விவரங்கள் மற்றும் பயிர் தகவல்கள் அனைத்தும் டிஜிட்டல் முறையில் சேமிக்கப்படும்.
தகுதியற்றவர்கள் மற்றும் நிலம் இல்லாதவர்கள் இத்திட்டத்தின் பலனைப் பெறுவதைத் தடுக்கவே இந்த புதிய நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் மூலம் உண்மையான விவசாயிகளுக்கு மட்டுமே அரசு உதவித்தொகை நேரடியாகச் சென்றடைவது உறுதி செய்யப்படும். விவசாயிகள் தங்களின் நிலப்பத்திரம் மற்றும் ஆதார் ஆவணங்களை மாநில வேளாண் துறை இணையதளத்தில் பதிவேற்றி இந்த ஐடி-க்கு விண்ணப்பிக்கலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க இயலாதவர்கள் பொது சேவை மையங்கள் (CSC) அல்லது வேளாண் முகாம்களை அணுகி ஐடியைப் பெற்றுக் கொள்ளலாம். 22-வது தவணை நிதியைப் பெற விரும்புவோர் மற்றும் புதிய பயனாளிகள் தாமதிக்காமல் இந்த நடைமுறையை முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. பிஎம் கிசான் திட்டத்தில் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் எதிர்காலத்தில் மற்ற மாநிலங்களுக்கும் விரிவுபடுத்தப்பட வாய்ப்புள்ளது…
