Monday, March 2, 2026
No menu items!

“நல்லது செஞ்சா நல்லது நடக்கும்” – இணையத்தை கலக்கும் விஜய்யின் ‘One Last Kutti Story’!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய், தனது அரசியல் மற்றும் பொதுவாழ்வு பயணங்களில் அவ்வப்போது சொல்லும் ‘குட்டி ஸ்டோரி’கள் மிகவும் பிரபலம். அந்த வகையில், மனிதாபிமானத்தையும் உதவியின் அவசியத்தையும் வலியுறுத்தும் வகையில் ஒரு நெகிழ்ச்சியான கதையை அவர் பகிர்ந்துள்ளார்.

மழையும் குடையும் – ஒரு சுழற்சி: ஒரு ஆட்டோ ஓட்டுநர் மழையில் நனைந்து வந்த ஒரு கர்ப்பிணிப் பெண்ணை ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு செல்கிறார். மழையிலிருந்து காக்கத் தன்னிடம் இருந்த குடையை அந்தப் பெண்ணிடம் கொடுக்கிறார். அந்தக் குடையை மீண்டும் எப்படித் தருவது என்று அந்தப் பெண் கேட்டபோது, “யாருக்காவது தேவைப்படுபவர்களுக்குக் கொடுத்து விடுங்கள்” என்று அந்த ஆட்டோக்காரர் கூறுகிறார்.

தொடர்ந்த மனிதாபிமானம்: மருத்துவமனை சென்ற அந்தப் பெண், அங்கு மழையில் நனைந்து நடுங்கிக் கொண்டிருந்த ஒரு பெரியவரிடம் அந்தக் குடையைக் கொடுக்கிறார். அவரும் அதை யாரிடம் திருப்பித் தர வேண்டும் எனக் கேட்டபோது, அதே பதிலைச் சொல்லி குடையைக் கொடுத்துவிட்டுச் செல்கிறார் அந்தப் பெண்.

பெரியவர் பேருந்து நிலையம் சென்றபோது, அங்கு மழையில் நனைந்தபடி பூ விற்றுக் கொண்டிருந்த ஒரு தாயிடம் அந்தக் குடையைக் கொடுத்துவிட்டுச் செல்கிறார். சிறிது நேரத்தில், மழையில் நனைந்தபடி வந்த ஒரு இளம் பெண்ணிடம் பூ விற்கும் தாய் அந்தக் குடையைக் கொடுக்கிறார். அந்தப் பெண்ணும் நன்றியுடன் அதைப் பெற்றுக்கொண்டு வீடு திரும்புகிறாள்.

நெகிழ்ச்சியான முடிவு: தன் மகள் மழையில் நனைந்தபடி வருவாள் என்று கவலையுடன் வீட்டின் வாசலில் காத்திருக்கிறார் ஒரு தந்தை. அந்த மகள் கையில் குடையுடன் சிரித்தபடி வருகிறாள். அந்தத் தந்தை வேறு யாருமல்ல, கதையின் ஆரம்பத்தில் குடையைக் கொடுத்த அதே ஆட்டோ ஓட்டுநர் தான்.

நீதி: “முடிந்தவரை சின்னச் சின்னதாக நல்லது செய்து பாருங்கள், வாழ்க்கை ஜாலியாக இருக்கும்” என்பதே இக்கதையின் மூலம் விஜய் சொல்லும் கருத்தாகும்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest News