ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் மூத்த தொடக்க ஆட்டக்காரர் உஸ்மான் கவாஜா (39), இங்கிலாந்து அணிக்கு எதிராக சிட்னியில் நடைபெறவுள்ள ஐந்தாவது ஆஷஸ் டெஸ்ட் போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

பாகிஸ்தானில் பிறந்து ஆஸ்திரேலியாவிற்குப் புலம்பெயர்ந்த கவாஜா, அந்த நாட்டுக்காக விளையாடிய முதல் முஸ்லிம் டெஸ்ட் வீரர் என்ற வரலாற்றைப் படைத்தவர். 2011-ல் அறிமுகமான அவர், தனது 15 ஆண்டுகால கிரிக்கெட் வாழ்க்கையில் 88 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 6,000-க்கும் மேற்பட்ட ரன்களைக் குவித்துள்ளார். குறிப்பாக 2023-ம் ஆண்டு ஐசிசி (ICC) சிறந்த டெஸ்ட் வீரராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தனது ஓய்வு குறித்த செய்தியாளர் சந்திப்பில், கிரிக்கெட் வாழ்க்கையில் தான் எதிர்கொண்ட கசப்பான அனுபவங்களை அவர் பகிர்ந்து கொண்டார். ஆஷஸ் தொடரின் போது காயம் காரணமாக அவர் விளையாடாததை ஊடகங்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் கடுமையாக விமர்சித்ததை அவர் சுட்டிக்காட்டினார். மற்ற வீரர்கள் காயம் அடையும் போது காட்டப்படாத தீவிரம், தான் காயம் அடைந்த போது மட்டும் காட்டப்பட்டதாகவும், இது தன்னை “சோம்பேறி” மற்றும் “அர்ப்பணிப்பு இல்லாதவன்” என்று சித்தரிக்கும் இன ரீதியான பாகுபாட்டின் (Racial Stereotyping) ஒரு பகுதி என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

“எனது பெயர் ‘ஜான் ஸ்மித்’ (John Smith) என்று இல்லாததால் பல நேரங்களில் நான் மாறுபட்ட முறையிலேயே நடத்தப்பட்டேன்” என்று அவர் குறிப்பிட்டார். தான் சந்தித்த இத்தகைய சவால்கள் இனிவரும் காலங்களில் மற்ற இளம் வீரர்களுக்கு ஏற்படக்கூடாது என்றும், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அனைத்து வீரர்களையும் சமமாக நடத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

கவாஜாவின் ஓய்வு குறித்துப் பேசிய கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் சிஇஓ டாட் கிரீன்பெர்க், ஆஸ்திரேலிய கிரிக்கெட்டிற்கு கவாஜா ஆற்றிய பங்களிப்பு அளப்பரியது என்றும், அவர் ஒரு சிறந்த மற்றும் மீள்திறன் கொண்ட வீரர் என்றும் புகழாரம் சூட்டினார். வரும் வாரம் சிட்னி மைதானத்தில் நடைபெறவுள்ள போட்டியில் அவரது சாதனைகளைக் கொண்டாடத் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here