சர்வதேச அளவில் மிக முக்கிய கடல் வர்த்தகப் பாதையாகத் திகழும் ஹார்முஸ் நீரிணையைப் பயன்படுத்தும் வணிகக் கப்பல்களுக்குப் புதிய கட்டணத்தை விதிப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.உலகப் பொருளாதாரத்திலும், சர்வதேசக் கடல்வழிப் போக்குவரத்திலும் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தும் வகையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்த அதிரடி முடிவை வெளியிட்டுள்ளார்.ஹார்முஸ் நீரிணைப் பாதையைக் கடந்து செல்லும் அனைத்து வணிகக் கப்பல்களின் மொத்த சரக்கு மதிப்பில், 20 சதவீதத் தொகையை அமெரிக்கா கட்டணமாக வசூலிக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.மிகவும் பரபரப்பான இந்த சர்வதேச நீர்வழியில் பயணிக்கும் சரக்குக் கப்பல்களுக்குப் பாதுகாப்பு வழங்குவதை முன்னிறுத்தி இத்தகைய பெரும் வரி அல்லது கட்டண விதிப்பு கொண்டு வரப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் இந்தத் திடீர் வரிவிதிப்பு அறிவிப்பானது, உலகளாவிய கடல்சார் வர்த்தக நிறுவனங்கள் மற்றும் பல்வேறு நாடுகளுக்கு இடையே கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . இத்துடன் நிறுத்தாமல், ஈரானியக் கப்பல்களுக்கு எதிராக அமெரிக்கக் கடற்படை மேற்கொள்ளும் கடல்வழி முற்றுகை நடவடிக்கைகளும் மீண்டும் முழு வீச்சில் அமல்படுத்தப்படும் என்று டிரம்ப் கூறியுள்ளார்.ஹார்முஸ் நீரிணையின் ஒட்டுமொத்தப் பாதுகாப்பையும், அதன் வழித்தடக் கண்காணிப்பையும் இனிமேல் அமெரிக்காவே முன்னின்று நடத்தும் என்றும், அதன் பாதுகாவலனாக அமெரிக்காவே இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஈரான் மற்றும் அதன் நட்பு நாடுகளின் கடல்வழி நகர்வுகளைக் கட்டுப்படுத்தவும், அமெரிக்காவின் மேலாதிக்கத்தை நிலைநாட்டவும் இத்தகைய கடுமையான ராணுவ மற்றும் பொருளாதார நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.டிரம்பின் இந்த அறிவிப்பால், இந்த வழித்தடத்தைப் பயன்படுத்தும் பிற நாடுகளின் கச்சா எண்ணெய் மற்றும் வணிகக் கப்பல்களுக்கான காப்பீட்டுக் கட்டணங்களும், போக்குவரத்துச் செலவுகளும் பல மடங்கு உயர வாய்ப்புள்ளது…

