தனது சொந்தத் தொகுதியான கொளத்தூரில் இன்று பல்வேறு நலத்திட்டப் பணிகளை ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார். அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், மத்திய பட்ஜெட் குறித்துக் கடும் விமர்சனங்களை முன்வைத்தார். மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பட்ஜெட்டில் தமிழக நலன் சார்ந்த திட்டங்கள் எதுவும் இடம்பெறாதது மிகுந்த ஏமாற்றத்தை அளிப்பதாகக் குறிப்பிட்டார். இதற்கான தக்க பாடத்தைப் பொதுமக்கள் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவிற்குப் புகட்டுவார்கள் என்றும் அவர் எச்சரித்தார்.
தொடர்ந்து காங்கிரஸ் உடனான கூட்டணி குறித்துப் பேசிய அவர், தொகுதிப் பங்கீடு தொடர்பான அதிகாரப்பூர்வ ஆலோசனைகள் விரைவில் தொடங்கப்படும் எனத் தெரிவித்தார்.அப்போது செய்தியாளர்கள், தற்போதைய அரசியல் சூழலில் உங்களின் ‘புதிய எதிரி’ யார் எனக் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த முதலமைச்சர், “யாரையும் நான் எதிரியாகப் பார்க்கவில்லை; அரசியலில் அனைவரையும் நண்பர்களாகவே பார்க்கிறேன் மற்றும் மதிக்கிறேன்” எனப் புன்னகையுடன் கூறிவிட்டுச் சென்றார்.
விஜய்யின் அரசியல் வருகை மற்றும் பிற அரசியல் நகர்வுகள் குறித்த விவாதங்களுக்கு மத்தியில், முதல்வரின் இந்த ‘நண்பர்கள்’ என்ற கருத்து அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. தொகுதி மேம்பாட்டுப் பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட முதலமைச்சர், மக்களுடன் செல்ஃபி எடுத்துத் தனது பயணத்தை நிறைவு செய்தார்…

