கேரளா மாநிலத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயில் நடை, மாசி மாதப் பூஜைகளுக்காக இன்று மாலை திறந்து வைக்கப்படுகிறது. மாதந்தோறும் நடைபெறும் சிறப்பு வழிபாட்டின் ஒரு பகுதியாக, இன்று மாலை கோயில் தந்திரி முன்னிலையில் மேல்சாந்தி நடையைத் திறந்து தீபாராதனை செய்கிறார். மாசி மாதப் பிறப்பை முன்னிட்டு நாளை முதல் பல்வேறு சிறப்புப் பூஜைகளும், அபிஷேகங்களும் நடைபெறவுள்ளன. இதற்காகக் கேரளா மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் சபரிமலைக்கு வந்தவண்ணம் உள்ளனர். ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யும் பக்தர்களுக்கு மட்டுமே தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த மாதத்திற்கான வழிபாட்டு அனுமதி வரும் பிப்ரவரி 17-ம் தேதி வரை நடைமுறையில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் கூட்ட நெரிசலின்றித் தரிசனம் செய்ய ஏதுவாகத் தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பம்பை ஆறு மற்றும் சன்னிதானம் பகுதிகளில் கூடுதல் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
17-ம் தேதி வரை தினசரி அதிகாலை முதல் இரவு வரை நெய் அபிஷேகம் உள்ளிட்ட முக்கியச் சடங்குகள் நடைபெற உள்ளன. பிப்ரவரி 17-ம் தேதி இரவு அத்தாள பூஜைக்குப் பின் மீண்டும் நடை சாத்தப்படும் எனத் தேவசம்போர்டு அறிவித்துள்ளது…

